Sunday, February 2, 2014
'அஊது பில்லாஹி மினஷ் ஷெய்த்தானிற்றஜீம்'
11012014
அவன் எனது எதிரியென்று
அத்தனை தடவை சொன்ன போதும்
அவனை விரட்டுவதற்கான
அவ்வளவு முயற்சிகளையும் செய்த பிறகும்
..............
அவன்
நான் சாப்பிடும் போது
எனது உணவுத்தட்டின்
எதிர் முனையில் அமர்ந்து
என்னோடே சாப்பிடுகிறான்
படுக்கையறையில்
எனது போர்வைக்குள்ளேயே
புகுந்து கொள்கிறான்
எனது கனவுகளை
எப்படியெல்லாமோ மாற்றிவிடுகின்றான்
தொழுகையில்
எனக்கு மிகச் சமீபமாக
நின்று கொள்கிறான்
அவன் என்னோடு
எந்த சமரசத்தையும்
செய்து கொள்ளவில்லை
ஆனால்
எனது எல்லாப் பயணங்களிலும்
என்னோடு அமர்ந்து கொள்கிறான்
என்னை விட அதிகமாக
எனது உள்ளத்தோடு
உரையாட முயற்சி செய்கிறான்
ஒரு புத்தகத்தில்
ஏதோ ஒரு பந்தியில்
அமர்ந்தே இருக்கிறான்
புனித நூலுக்குள்ளே
அவனில்லையென்ற போதும்
அதனை ஓதும் போது
அதனைச் சூழ
அத்தனை இடங்களிலும்
நிறைந்து விடுகிறான்
எனது தனிமைகளில்
என்னை முழுமையாக
பயன்படுத்த முயற்சிக்கிறான்
நான் பார்வையிடும்
வலைத் தலங்களை
நுனுக்கமாக அவதானிக்கிறான்
முக நூலிலும்
மிக நெருக்கமாகவே
பழகி வருகிறான்
கழிவறைகளில்
மிகச் சுதந்திரமாக
என்னோடு தோழமை கொள்கிறான்
ஆனாலும்
ஒவ்வொன்றின் ஆரம்பத்திலும்
நான் சொல்லிக் கொள்ளவே செய்கிறேன்
'அஊது பில்லாஹி மினஷ் ஷெய்த்தானிற்றஜீம்'11012014
அதன் போது
30122013
எனது இறுதி இலக்கு
ஒரு கவிதை எழுதுவது
அந்தக் கவிதையை
எழுதும் போது
இந்த வானுக்கு கீழே
நான் இருக்கக் கூடாது
இந்த மண்ணும் புற்களும்
என்னைச் சுமக்கவும் கூடாது
இந்த பூமி புறந்தள்ளும்
எந்த ஒன்றும்
என் வயிற்றறையில்
எஞ்சக் கூடாது
...............
நான் கவி எழுதும் தளமாக
நீரோடும் அருவியோ
நிரம்பி வழியும் குளங்களோ
இருந்து விடவே கூடாது
பாலும் தேனும்
பல வகை மதுவும்
அருவியாய் வளைந்தோட
அருகில் நானமர்ந்து
அந்தக் கவிதையை எழுத வேண்டும்
எந்தக் கண்ணும் கண்டிராத
நித்தியக் கண்ணுடைய
நிரந்தரக் குமரிகள்
எந்தக் காதும் கேட்டிறாத
இனிய குரல் கொண்டு
இசை சேர்த்துப் பாட வேண்டும்
அதன் போது
என் கவிதையின் பாடு பொருள்
என்னைப் பார்த்திருக்க
பௌர்ணமி இரவின் நிலவைப் போல
என் பாடு பொருளை
நான் பார்த்துக் கொண்டிருப்பேன்
Subscribe to:
Posts (Atom)