Thursday, February 7, 2013

முஸ்லிம் தேசத்து முகவரி


Share/Bookmark



ஈழ முஸ்லிம் பெருந்தலைவ!
மனித குலப் பெருமேதை
மறைந்த மாமனித!
மர்ஹூம் அஷ்ரபுக்கு . . . . .

ஆண்டவன் அடியன்
அன்பனின் அஞ்சல் . . . . .

மர்ம ராத்திரியின்
மங்கிய இருளில்
உன் உதடுகள்
உச்சரித்திருந்தாலும் . . . .

அந்தக் கலிமாவை
அவன் மட்டுமே அறிவான் . . . . .

அந்த நாளின் அடையாளமாய் . . . . .

ஒரு தசாப்தம் முடிந்து
ஒற்றை வருடம் கழியும்போது
அர்த்தமுள்ள ராத்திரியில்
என் பேனையின் நினைவுகள்

எங்கள் தேசிய தொலைக் காட்சி
கப்றரை வரை காட்சி தர
நிச்சயமாய் வாப்பில்லை . . .

இறைவன் நாடவில்லையேல்
நீ அறிய வாய்ப்பில்லை. . . . . .

எங்கள் வளமும்
பூர்வீக நிலமும்
மீண்டும் பெற்றோம். . . ****

குரல் கொடுத்தும்
விரல் நீட்டியும்
ஆரம்பித்தவன் நீயன்றோ . . . . .

எத்தனை தலைமைகள்
எத்தனை சொன்னாலும்
முஸ்லிம் தலைமையை
முதலில் உணர்ந்த
மூத்தவன் நீயன்றோ . . . .. . .

ஊருக்கு ஒரு கட்சி
உன் பெயர் சொல்லியல்லவா
ஊர்வலம் போகிறார்கள்

சோதர!
உண்மையைச் சொல்
உந்தன் கட்சி எது? ? ?

நீ நட்ட ஆலமரத்தில்
பழுத்து விழுந்த ஆலம் விதைகள்
தனித்தனியே மரமாகி
பழமின்றி நிழலுமின்றி
பட்டமரமானதோடு . . . . . . .

நீ நட்ட முதல் மரமும்
மூச்சுத் திணறுவதறிவாயா? ? ?

முன்பெல்லாம்
பெரு விலங்குகள் நிழல் பெற்ற
எங்கள் மரங்களில்
சிறு கொடிகள் படர்வதால்
எங்கள் நிழல்களும்
மறுக்கப்பட்டிருக்கிறது . . . . .

தற்காலிகமோ நிரந்தரமோ
நீயறிவாயா சோதர ? ? ?

தலைவா!
நீ விட்டுச் சென்ற கடமைகள்
தொட்டுச் செல்லப்படவில்லை . . . .
இன்னும் தேங்கிக் கிடக்கின்றன. . . .

உன்னுடைய பெயர் மட்டும்
உறுப்பமைய அச்சடித்து
உச்சரித்து மொழியப்பட்டு . . . .

தேர்தல் காலங்களில்
பருவகால ஏளத்தில் . . .
பக்குவமாய்ப் பயணிக்கிறது. . . . . .

****வடகிழக்கு முஸ்லிம்களின் சொந்த நிலங்கள் மீண்டும் அவர்களுக்கே வ‌ழங்கப்பட்டது. ......யுத்தத்தின் பின்

16-09-2000 மாம் ஆண்டு மரணித்த தலைவர்அஷ்ரப் நினைவாக 16-09-2011 ஆம் திகதி என் பேனை எழுதியவை.

பஞ்சாய்ப் பறந்த
அவர் உடலுக்கு
இது சமர்ப்பணம். . . . .
   2011-09-10

No comments:

Post a Comment